ஜூலை 31-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு ஆளுநர் கெடு

கர்நாடக சட்டப்பேரவையில் ஜுலை 31-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

Update: 2019-07-26 06:36 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்)  கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து  ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை  வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.

இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை முதல்-மந்திரி (பொறுப்பு) பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் புதிய அரசை அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கினர். ஆட்சி அமைப்பது குறித்து மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாக எடியூரப்பா கூறிவந்தார். 

இந்த நிலையில்,  இன்று காலை ஆளுநர் மாளிகை சென்ற எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  இதன்பின்னர் பேட்டி அளித்த எடியூரப்பா, ஆட்சி அமைக்க ஆளுநர் கடிதம் தந்து இருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க இருப்பதாகவும் கூறினார். 

இந்த சூழலில், இன்று முதல் மந்திரியாக பதவியேற்கும் எடியூரப்பா வரும் 31-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

மேலும் செய்திகள்