கேரளா: விபத்தில் பத்திரிக்கையாளர் பலியான சம்பவம்- ஐஏஎஸ் அதிகாரிக்கு ஜாமீன்

விபத்தில் பத்திரிக்கையாளர் பலியான சம்பவத்தில் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Update: 2019-08-06 16:29 GMT
திருவனந்தபுரம்,

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீராம் வெங்கிடராமன் (வயது 33) கேரள மாநில சர்வே துறை இயக்குனராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் அருங்காட்சியக சாலையில் ஒரு சொகுசு காரில் மது போதையில் வேகமாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. 

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பத்திரிகையாளர் முகமது பஷீர் (35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த ஸ்ரீராம் வெங்கிடராமன் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கிடையில்,  நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உத்தரவிட்டார். 

 இந்த சூழலில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இரத்த  பரிசோதனை அறிக்கையில், மது அருந்தவில்லை என தெரியவந்ததையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்