இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை சோனியா காந்தி உறுதி

இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் மதவெறிக்கு இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உறுதிபட தெரிவித்தார்.

Update: 2019-08-15 23:30 GMT
புதுடெல்லி,

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சித்தலைவர் சோனியா காந்தி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-

ஏராளமானோரின் அளவிட முடியாத தியாகத்தின் விளைவால் நாடு விடுதலை அடைந்திருப்பதை குடிமக்கள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் இந்தியாவை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தகைய சுதந்திரத்தின் மதிப்பீடுகளான சகோதரத்துவம், அமைதி மற்றும் சமத்துவத்தை பேணி பாதுகாக்கும் புனிதமான கடமையை ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும்.

இந்திய இறையாண்மையை பாதுகாப்பதில் நமது ஆயுதப்படைகளின் உயர்ந்த தியாகத்தையும் மறந்துவிடக்கூடாது. மேலும் நாட்டின் கட்டமைப்பில் விவசாயிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு அளப்பெரியது.

ஜனநாயகம் மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்தியா 73-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில் சகிப்பின்மை, மதவெறி, இனவெறி, அநீதி, மூடநம்பிக்கை போன்றவற்றுக்கு இங்கு இடமில்லை.

எனவே பூரண சுதந்திரத்தை அனுபவிப்பதற்காக இத்தகைய அநீதி, சகிப்பின்மை, பாகுபாடுக்கு எதிராக நாட்டை உயர்த்த வேண்டும். கருணை, உடனிருப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி கொள்கைகளை அரசியல், சமூகம், பொருளாதாரத்தின் அழியாத அம்சங்களாக புத்துயிரூட்ட வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், பூபிந்தர் சிங் ஹூடா, கபில்சிபல், மோதிலால் வோரா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்