”தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்”- சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள் என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

Update: 2019-08-29 07:25 GMT
புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சி.பி.ஐ. ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவருடைய காவல் விசாரணை 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. 

ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் நேற்று முன்தினம் வாதாடினார். நேற்று அமலாக்கத்துறை தரப்பில் பதில் வாதங்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  முன்வைத்தார்.

மேலும் வாதங்களை இன்று முடித்துக் கொள்வதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு  இருந்தது. 

இன்று  அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிதம்பரம் தப்பிக்க நினைக்கிறாரா என்பதை விசாரணை அமைப்பு முடிவு செய்யும். சிதம்பரத்திடம் நாங்கள் நேர்காணல் செய்ய விரும்பவில்லை; அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க விரும்புகிறோம். வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை வைத்து விசாரணை நடத்தவுள்ளோம்.வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விட தப்பிக்கவே அதிகமாக ப.சிதம்பரம் முயற்சி செய்தார்.  சிதம்பரம் செய்த  குற்றம்  சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது. ’தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்’ ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களின் வழக்குகளை பாதிக்கும் என வாதாடினார்.

மேலும் செய்திகள்