பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவி - உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி

சாலையை சீரமைக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

Update: 2019-09-02 22:24 GMT
சிவமோகா,

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்துக்கு உட்பட்ட கொடாசே கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற கல்லூரி மாணவி, தனது கிராமத்துக்கு செல்லும் அரோடி-மண்ட்ரோலி சாலை மிகவும் மோசமாக கிடப்பதாகவும், இந்த சாலையை சீரமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை பார்த்த பிரதமர் மோடி, உடனடியாக இந்த பிரச்சினையை மாநில தலைமை செயலாளர் விஜயபாஸ்கரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே சிவமோகா மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளை தொடர்பு கொண்ட தலைமை செயலாளர், அந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி அந்த சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அந்த மாணவியை அதிகாரிகள் சந்தித்து இந்த தகவல்களையும் தெரிவித்தனர். அத்துடன் சிவமோகா எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோரும் மாணவியை சந்தித்து, சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

தனது கடிதத்துக்கு பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மாணவியும், அவரது கிராமத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்