சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம் -சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தகவல்
சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
சபரிமலை கோவில் தொடர்பாக ரேவதி நாள் பி.ராமவர்ம ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கேரள அரசின் வழக்கறிஞர் சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்ற தகவலை வாய்மொழியாகத் தெரிவித்த நிலையில் அதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.
இந்நிலையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள அரசு வழக்கறிஞர் பிரகாஷ், அந்த சட்டம் சபரிமலை கோவிலுக்கு மட்டுமன்றி திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் வரும் அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும் என்றும் சட்டம் தொடர்பான வரைவு மசோதா இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சட்டம் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
தேவசம் போர்டின் கீழ் 150-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.