காஷ்மீர்: போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்ததால் பரபரப்பு

காஷ்மீரில், போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-15 21:00 GMT
ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்லி கிராமத்தை சேர்ந்தவர் இக்லாக் அகமது கான் (வயது 32). இவர் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக அவரை வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இக்லாக் அகமது கான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் ரஜோரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை மற்றும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்