காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக பாதிப்பு: ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக முடங்கியது. ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது.

Update: 2019-09-15 22:30 GMT
ஸ்ரீநகர்,

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் எளிய தாக்குதல் இலக்காக விளங்கிய காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி அதிரடியாக ரத்து செய்தது.

அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அதைத் தொடர்ந்து காஷ்மீரில் விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கிற வகையில் வதந்தி பரப்புகிற இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. செல்போன் சேவை, தரைவழி தொலைபேசிச்சேவை நிறுத்தப்பட்டது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு அமலானது.

இதன் காரணமாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நேற்று 42-வது நாளாக முடங்கியது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் தனியார் வாகனங்கள் தடையின்றி ஓடின.

ஸ்ரீநகரில் வாரச்சந்தை இயங்கியது. பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கிச்செல்வதற்காக சந்தையில் திரளான எண்ணிக்கையில் கூடினர். அங்கு கடைகளை மூடச்சொல்லி விஷமிகள் வற்புறுத்துவதை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசிச்சேவை இயங்கியது. ஆனால் இணையதளச்சேவை முடக்கம் தொடர்கிறது. குப்வாரா, ஹந்த்வாரா போலீஸ் மாவட்டங்களில் செல்போன் பேச்சு சேவை மட்டும் உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும்கூட, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபாப முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் கல்வி ஆர்வலர் மலாலா, காஷ்மீரில் அமைதி நிலவவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பவும் ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்