பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்; 27-ந் தேதி ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அதில் 27-ந் தேதி ஆஜராக உத்தரவிட பட்டுள்ளது.

Update: 2019-09-22 22:45 GMT
லக்னோ,

கடந்த 1992-ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக கல்யாண் சிங் பதவி வகித்து வந்தார். பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருடன் கல்யாண் சிங்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக கவர்னராக இருந்ததால், அவர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. கடந்த 9-ந் தேதி கவர்னர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

அதே சமயத்தில், அவருக்கு சம்மன் அனுப்பக்கோரி, இவ்வழக்கை விசாரித்து வரும் லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. அதை ஏற்று, கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவ் சம்மன் அனுப்பி உள்ளார். வருகிற 27-ந் தேதி, கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்