பா.ஜனதாவுக்கு தாவிய தேசியவாத காங்கிரஸ் பெண் வேட்பாளர் - மராட்டிய சட்டசபை தேர்தல் களத்தில் பரபரப்பு

பா.ஜனதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஒருவர் தாவியுள்ளதால், மராட்டிய சட்டசபை தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-09-30 22:44 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக நமிதா முன்டாடா அறிவிக்கப்பட்டு இருந்தார்.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வந்த நிலையில் வேட்பாளர் நமிதா முன்டாடா நேற்று திடீரென தேசியவாத காங்கிரசில் இருந்து விலகினார். மேலும் அவர் பார்லியில் மத்திய மந்திரி பங்கஜா முண்டே முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். தேர்தல் களத்தில் இருந்த வேட்பாளரே கட்சி தாவியது தேசியவாத காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், நமிதா முன்டாடா பா.ஜனதா சார்பில் கைஜ் தொகுதியில் போட்டியிடுவார் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்