மூழ்கும் நிலையில் காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன் ராகுல்காந்தி -ஓவைசி விமர்சனம்

மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன்தான் ராகுல் காந்தி என்று ஓவைசி விமர்சித்துள்ளார்.

Update: 2019-10-15 06:50 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் பிவாண்டி மேற்கு தொகுதியில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

"நடுக்கடலில் ஒரு கப்பல் மூழ்கும்போது அந்தக் கப்பலின் கேப்டன், பயணிகள் ஒவ்வொருவரையும் அதிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் எனும் கப்பல் மூழ்கிக் கொண்டுவரும்போது, கேப்டனாக இருந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றாமல் பொறுப்பற்ற முறையில் கட்சித் தலைவர் பதவியைத் துறந்து சென்று விட்டார்.

கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கருணையால் முஸ்லிம் மக்கள் வாழவில்லை. நாங்கள் அரசியலைப்புச் சட்டம் அளித்த பாதுகாப்பாலும் கடவுளின் கருணையாலும் தான் வாழ்கிறோம்.

பாஜக அரசு நீண்ட காலம் நீடிக்கும் என்றால் இருள் நீண்ட காலம் நீடிக்கும் என்பதுதான் அர்த்தமாக இருக்கும். மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு விரோதமானது. முஸ்லிம் பெண்களுக்கு நீதி அளித்து விட்டதாக பிரதமர் மோடி கருதினால் அது தவறானது.  மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மராத்தியர்களுக்கு வழங்கியதுபோல் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்”  என்றார்.

மேலும் செய்திகள்