காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
தெலுங்கானாவில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயரை வைத்த காரை ஓட்டிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது.
அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் போலீசார் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரியின் பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.