51 சட்டசபை, 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
51 சட்டசபை, 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் 51 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
இந்த 51 சட்டசபை இடங்களில் அதிகபட்சம் 11 உத்தரபிரதேசத்திலும், குஜராத்தில் 6, பீகார், கேரளாவில் தலா 5 , அசாமில் 4, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா 1 இடம், பஞ்சாப் (4 இடங்கள்), சிக்கிம் (3 இடங்கள்), ராஜஸ்தான் (2 இடங்கள்) என சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த சட்டமன்ற இடங்களில் கிட்டத்தட்ட 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மீதமுள்ள இடங்களில் மாநில கட்சிகள் முன்னணியில் உள்ளன.
உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மராட்டிய மாநிலம் சதாரா மற்றும் பீகாரில் சமஸ்திபூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் முறையே தேசியவாத காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி முன்னிலை வகிக்கிறது.