மம்தா பானர்ஜி தனது இல்லத்தில் நடைபெறும் காளி பூஜைக்கு என்னை அழைத்து உள்ளார் - கவர்னர் ஜகதீப் தான்கர்

மம்தா பானர்ஜி தனது இல்லத்தில் நடைபெறும் காளி பூஜை கொண்டாட்டத்திற்கு என்னை அழைத்து உள்ளார் என கவர்னர் ஜகதீப் தான்கர் கூறி உள்ளார்.

Update: 2019-10-26 08:11 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில துர்கா பூஜை விழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வாடிக்கை. கடந்த 11ந் தேதி  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் துர்கா பூஜை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் கவர்னர்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்வரிசையில் முதல்வர் மம்தா அமர்ந்திருந்த நிலையில் கவர்னர் ஜக்தீப் தான்கர் 4 வரிசை தள்ளி அமர வைக்கப்பட்டதாகவும், துர்கா பூஜை விழாவில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாகவும் கூறி அதிரவைத்துள்ளார்.

இதன் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கவர்னர்  ஜக்தீப் தான்கர், இந்த அவமரியாதை எனக்கானது அல்ல, மேற்குவங்க மக்களுக்கானது என்றும் கூறி இருந்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் இது போன்ற அவமானத்தினால் எனக்கு தூக்கமில்லா இரவுகளாக தற்போது நகர்ந்து கொண்டிருப்பதாகவும்,  ஜக்தீப் தான்கர் குற்றம்சாட்டனார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த் நிலையில் கவர்னர் ஜகதீப் தான்கர்  கூறியதாவது :-

பாய் தூஜ் நிகழ்வில் நானும் எனது மனைவியும் அவரது இல்லத்தில் இருக்க விரும்புகிறேன் என்று நான் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தேன். முதல்வர், தனது வட வங்க சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, என்னையும் எனது  மனைவியையும் தனது இல்லத்தில் காளி பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்.

மேலும் கூறியதாவது:- மம்தா பானர்ஜியின் தெற்கு கொல்கத்தா இல்லத்தில்  நடைபெறும் காளி பூஜையில் கலந்து கொள்ள தன்னையும் தனது மனைவியையும்  அழைத்துள்ளார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தங்கள் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். 1978 முதல் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின்  இல்லத்தில் நடைபெறும் காளி பூஜைக்கான அழைப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பூஜையில் கலந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்