8 ஆடம்பர கார்களை திருடிச்சென்ற கொள்ளையர்கள்

லக்னோ அருகே, 8 ஆடம்பர கார்களை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2019-11-05 20:16 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ அருகே, பழைய கார்கள் விற்பனை மையம் உள்ளது. அங்கு ஏராளமான கார்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் அந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அலுவலகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த கார் சாவிகளை எடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 8 கார்களை திருடிச் சென்றனர். அவற்றில் பி.எம்.டபிள்யூ, ஆடி போன்ற ஆடம்பர கார்களும் அடங்கும்.

இந்த துணிகர கார் கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்து கார்களை மீட்க வேண்டும் என்று ‘கெடு’ விதித்து லக்னோவில் வர்த்தகர்கள் போராட்டம் நடத்தினர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கார் கொள்ளை நடந்துள்ளது. போலீஸ் நிலையத்துக்கும், மெட்ரோ ரெயில் நிலையத்திற்கும் மிக அருகில் இந்த விற்பனை மையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்