காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு, நெடுஞ்சாலை மூடப்பட்டது

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு இன்று காலை நிலவியது. இதனால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-07 09:30 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ஸ்ரீநகர் விமான  நிலையத்திற்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரை இணைக்கும் குரேஷ், மாச்சில், தாங்தார் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பிரதான சாலைகள் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஸ்தம்பித்தன.

பிற்பகலுக்கு பிறகு நிலவும் வானிலை சூழலை பொறுத்து விமான வருகை, புறப்பாடு பற்றி முடிவு செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடப்பு பருவ காலத்தில் முதல் முறையாக இன்று காலை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

வெப்ப நிலை உறைநிலைக்கும் கீழ் சென்றதால், மக்கள் கடும் குளிரை உணர்ந்தனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை காலை வேளையில் பாதிக்கப்பட்டது. மின் விநியோகமும் காலையில் ரத்து செய்யப்பட்டது.  சாலைகளை மூடியபடி கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ஸ்ரீநகர் துணை ஆணையர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்