இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-17 10:04 GMT
புதுடெல்லி,

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.  இதில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு  துவங்கி  மாலை 5 மணிக்கு நிறைவடைந்து. பின் 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், அதிகளவில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர்.  இதனால் வெற்றி வேட்பாளரை அறிவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், நண்பகல் வரை எண்ணப்பட்ட வாக்குகளில் கோத்தபய ராஜபக்சே 41 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை (50 சதவீதத்திற்கு மேல்) பெற்றுள்ளார்.  சஜித் பிரேமதாசா 34 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று (43 சதவீதம்) உள்ளார்.

வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார்.  இதனை அடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாசா ஒப்பு கொண்டார்.  இதனால் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக இன்று மாலைக்குள் முறைப்படி அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு எனது வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கு இடையிலான ஆழ்ந்த உறவு, சகோதரத்துவ நட்பை வலுப்படுத்தவும் மக்களுக்காகவும் அமைதி, வளர்ச்சி, இந்த பிராந்தியத்தில், அமைதிக்காகவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 

இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.

இதையடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில்  கூறியதாவது:-

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது இரு நாடுகளும், வரலாறு மற்றும் பொது நம்பிக்கையில் பிணைக்கப்பட்டுள்ளன. நமது நட்பை பலப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்