ஆண் குழந்தை பெற்றெடுக்காத மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்

ஆண் குழந்தை பெற்றெடுக்காத மனைவிக்கு முத்தலாக் கொடுத்து விட்டு வேறொரு பெண்ணை கணவன் திருமணம் செய்து கொண்டார்.

Update: 2019-11-19 05:14 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் மெஹ்ராஜ் பேகம்.  இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், ஆண் குழந்தை பெற்று கொடுக்கவில்லை என கூறி மெஹ்ராஜை அவரது கணவன் முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்து உள்ளார்.

இதுபற்றி போலீசில் மெஹ்ராஜ் கொடுத்துள்ள புகாரில், ஆண் குழந்தை பிறக்காததற்காக தனக்கு முத்தலாக் கொடுத்து விட்டு தனது கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என தெரிவித்து உள்ளார்.

எனக்கு நீதி கிடைக்கும்.  எனது கணவரின் செயல்களுக்காக அவருக்கு தண்டனை கிடைக்கும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணமான முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியை மூன்று தடவை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நிலவி வந்தது. சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், முத்தலாக்கை தடை செய்ய கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது.

ஆனால், மக்களவையில் நிறைவேறியபோதிலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறவில்லை. இருப்பினும், முத்தலாக்கை தடை செய்து கடந்த பிப்ரவரி 21ந்தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன்பின் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி அரசு இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்றியது.  ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.  இதன்படி, கடந்த ஆகஸ்டு 1ந்தேதியில் இருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின்படி, முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியிடம் எழுத்துமூலமாகவோ, வாய்மொழியாகவோ அல்லது எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு தகவல்கள் மூலமாகவோ ‘முத்தலாக்’ சொல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அப்படி சொல்வது செல்லாது, சட்ட விரோதமானது.

அதற்காக, சம்பந்தப்பட்ட ஆணுக்கு 3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்