உ.பி.: மகளுடன் தகராறு; காதலரை வரவழைத்து சுட்டு கொன்ற முன்னாள் வீரர்

உத்தர பிரதேசத்தில் மகளுடன் பழகிய காதலரை முன்னாள் வீரர் துப்பாக்கியால் 5 முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.

Update: 2024-04-29 05:28 GMT

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் சிங். எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஓய்வுக்கு பின்னர், தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவருடைய மகளுடன் விபுல் (வயது 25) என்ற பி.டெக் படிப்பு படித்து வந்த மாணவருக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 5 முதல் 6 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவருக்கு இடையே சில சமயங்களில் சிறிய அளவில் சண்டையும், சச்சரவும் ஏற்படுவது உண்டு.

இதுபற்றி ராஜேஷின் மகள், தனது சகோதரரிடம் கூறியிருக்கிறார். அவர், ராஜேஷிடம் இதனை தெரிவித்து உள்ளார். இவர்கள் இருவரின் சண்டை பற்றி ராஜேஷ் நன்றாக அறிந்திருக்கிறார். இவர்களுக்கு இடையேயான நட்புறவை ராஜேஷ் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். மகளுடனான தொடர்பை கைவிடும்படி விபுலை எச்சரித்து உள்ளார்.

இந்த சூழலில், 2 நாட்களுக்கு முன் மகள் வசித்து வந்த பிளாட்டுக்கு இரவில் ராஜேஷ் வந்துள்ளார். விபுலை நேரில் வரும்படி கூறியிருக்கிறார். விபுல் அதே கட்டிடத்தில் வசித்து வந்திருக்கிறார்.

விபுல் வந்ததும் ராஜேஷ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது, ஆத்திரமடைந்த ராஜேஷ் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 5 முறை சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே விபுல் சுருண்டு விழுந்துள்ளார். இதன்பின்னர், போலீசை தொடர்பு கொண்டு நடந்த விசயங்களை ராஜேஷ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, விபுலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். காவல் துணை ஆணையாளர் விவேக் சந்திர யாதவ் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்