மராட்டிய அரசியல் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம்
மராட்டியத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மராட்டியத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததற்கு எதிராகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாக மனு தாக்கல் செய்தன.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்த கடிதம் ஆகிய இரண்டு ஆவணங்களையும் சீலிட்ட உறையில், மத்திய அரசு தாக்கல் செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் காரசார வாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.