மனைவி, மகள்கள் உள்பட குடும்பத்தில் 5 பேரை கொலை செய்த கொடூரன்

ஜார்கண்ட் மாநிலத்தில் கொடூரன் ஒருவன் தனது மனைவி, மகள்கள் உள்பட குடும்பத்தில் உள்ள 5 பேர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-11-27 19:45 GMT
ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் கொடிர்மா மாவட்டம் மஷ்மோகன் என்ற பகுதியை சேர்ந்தவர் கங்கோ தாஸ். இவருடைய மனைவி ஷீலா தேவி (வயது 30) கர்ப்பிணி. இவர்களுக்கு நிகிதா குமாரி (8), ராதிகா குமாரி (5) என்ற 2 மகள்களும், 2 வயதில் ஷிவ் குமார் என்ற மகனும் இருந்தனர்.

சம்பவத்தன்று அதிகாலை கங்கோ தாஸ், கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவி ஷீலா தேவியை குத்திக்கொலை செய்தார். அதன்பின்பும் ஆத்திரம் அடங்காத அவர், தாய் சாந்தி தேவி (50) மற்றும் தனது 3 குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்தார். இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பூட்டி உள்ளே உட்கார்ந்து கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கதவை உடைத்து கங்கோ தாசை வெளியே அழைத்து வந்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கங்கோ தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இந்த கொடூர கொலைகளை செய்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்