ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்த அவலம்

உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-11-29 10:01 GMT
சோன்பத்ரா,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் உள்ளன.  அதனால் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு வேளை உணவேனும் கிடைக்கும் என்பதற்காக பள்ளி குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

இங்குள்ள சோப்பன் பகுதியில் அரசு முதன்மை பள்ளியில் 171 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பசியுடன் வந்த 81 பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு ஊழியர், 1 லிட்டர் பாலை அலுமினிய வாளியில் ஊற்றி அதில் தண்ணீர் கலந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் பள்ளி குழந்தைகளுக்கு ரொட்டியுடன் உண்பதற்கு உப்பு கொடுத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை  வெளியிட்ட பத்திரிகையாளர் மீது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார் என்று போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.  இந்நிலையில், இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்துள்ளது.

இதன்பின் கூடுதல் பால் உடனடியாக வழங்கப்பட்டது என மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொகிரியால் நிஷாங்க் கடந்த வாரம் மக்களவையில், மதிய உணவு திட்டம் பற்றிய 52  வழக்குகளில் அதிக அளவாக உத்தரபிரதேசத்தில் இருந்து 14 வழக்குகள் வந்துள்ளன என கூறினார்.

மேலும் செய்திகள்