இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு

இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவீடன் அரச தம்பதி பிரதமர் மோடியை சந்தித்தனர்.

Update: 2019-12-02 23:30 GMT
புதுடெல்லி,

சுவீடன் மன்னர் 16-ம் கார்ல் கஸ்தாப், ராணி சில்வியா ஆகியோர் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சுவீடன் அரச தம்பதியர் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் சுவீடன் அரச தம்பதியர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து மன்னர் கஸ்தாப் மற்றும் ராணி சில்வியா இருவரும் டெல்லி செங்கோட்டை, புகழ்பெற்ற ஜமா மசூதி உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்கள் மும்பை, உத்தரகாண்ட் போன்ற பகுதிகளுக்கும் செல்கின்றனர்.

சுவீடன் அரச தம்பதியுடன் அந்த நாட்டு உயர்மட்டக்குழுவும் இந்தியா வந்துள்ளது. அவர்கள் இந்திய உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா-சுவீடன் இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்