டெல்லியில் கடும் குளிர்: ரெயில், விமான சேவை பாதிப்பு; பொதுமக்கள் அவதி
டெல்லியில் கடும் குளிரால் ரெயில், விமான சேவை பாதிப்படைந்து உள்ளதுடன் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.
புதுடெல்லி,
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் குளிர் காலம் கடுமையாக மக்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. இவற்றில் குறிப்பிடும்படியாக டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
இதனால் அனந்த் விகார் அருகே பேருந்து நிலையத்தில் இரவில் மக்கள் தஞ்சமடைந்தனர். கடும் குளிரால் விமான சேவையும் பாதிப்படைந்தது. 3 விமானங்கள் மாற்றி விடப்பட்டுள்ளன.
கடும் குளிரால் தெளிவற்ற வானிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு 30 ரெயில்கள் காலதாமதத்துடன் வந்து சேரும் என வடக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
டெல்லியில் காற்று தர குறியீடும் அனந்த விஹார் மற்றும் ஓக்லா பேஸ் 2 ஆகிய பகுதிகளில் முறையே 462 மற்றும் 494 என கடுமையான பிரிவில் பதிவாகி உள்ளது.