கொல்கத்தா துறைமுகத்திற்கு சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை சூட்டினார் பிரதமர் மோடி

கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-12 08:35 GMT
கொல்கத்தா,

கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். 

முன்னதாக இன்று காலை கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அதனை தொடர்ந்து கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர், கொல்கத்தா துறைமுகம் இந்திய நாட்டின் தொழில், ஆன்மிகம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். இந்த துறைமுகத்தை நவீன இந்தியாவின் அடையாளமாக மாற்றுவது நமது கடமை என்று அவர் கூறினார்.

கொல்கத்தா துறைமுகத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளரும், பாரதீய ஜனசங்கத்தை தோற்றுவித்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

மேலும் செய்திகள்