எனது மகள் மரணத்தில் அரசியல் லாபம் தேடுகிறார்கள் ; நிர்பயா தாயார் குற்றச்சாட்டு

பாஜக-ஆம் ஆத்மி எனது மகள் மரணத்தில் அரசியல் லாபம் தேடுகிறார்கள் என நிர்பயா தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2020-01-17 06:52 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012–ம் ஆண்டு 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள, சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான்.

மீதமுள்ள முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7–ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை பரிசீலித்து வரும் உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து உள்ளது.

இந்த கருணை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என டெல்லி அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை துணைநிலை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அவரும் அதை ஏற்று முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நேற்று பரிந்துரைத்தார்.

இதற்கிடையே வருகிற 22–ந்தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு டெல்லி கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டை எதிர்த்து முகேஷ் குமார் சிங் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதுபோல குற்றவாளி ஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதால் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி வைக்க வேண்டும் என டெல்லி அரசு சார்பிலும் கோரிக்கை விடப்பட்டது.

இந்த விசாரணை முடித்து நீதிபதி தனது உத்தரவில், ‘மரண வாரண்டு பிறப்பித்து நான் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யமாட்டேன். ஆனால் ஒரு கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படாது. அந்தவகையில் 22–ந்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றமாட்டோம் என்ற அறிக்கை ஒன்றை சிறை அதிகாரிகள் எனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.

இதன் மூலம் குற்றவாளிகள் 4 பேரும் 22–ந்தேதி தூக்கில் போடப்பட மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்களது தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போகிறது.

கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நிர்பயா பெற்றோரின் வக்கீல் சீமா குஷ்வாகா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு பாஜக - ஆம் ஆத்மி கட்சிகள் இரண்டும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நிர்பயா வழக்கு  குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமாவது தொடர்பாக  நிர்பயா தாயார் கூறியதாவது:-

குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானது தொடர்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி  வருகின்றன. நீங்கள் பெண்களின் பாதுகாப்புக்கு  உறுதியளித்து 2014-ல் ஆட்சிக்கு வந்தீர்கள், எனவே தயவுசெய்து அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிடவும்.

இப்போது வரை, நான் ஒருபோதும் அரசியல் பேசவில்லை, இரு கைகளை ஏந்தி  நீதி கேட்கிறேன். ஆனால் இப்போது நான் சொல்ல விரும்புகிறேன், 2012-ல் மூவர்ணம் மற்றும் கறுப்புக் கொடிகளுடன் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இன்று அவர்கள் எனது மகளின் மரணத்துடன் அரசியல் லாபங்களுக்காக விளையாடுகிறார்கள்.

நீதி வழங்குவதில் இந்த தாமதத்திற்கு சிலர் மாநில அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள், சிலர் எங்களிடம் காவல்துறையை கொடுங்கள், குற்றவாளிகளை இரண்டு நாட்களில் தூக்கிலிடுவோம் என்று கூறுகிறார்கள்.

மணீஷ் சிசோடியா ஜி அவர்கள் டெல்லி வசம் போலீஸ் இருந்தால்  குற்றவாளிகள் இரண்டு நாட்களில் தூக்கிலிடப்படுவார்கள் என்று கூறுகிறார். டெல்லி  போலீஸ் படையை பெற வேண்டும் என்ற கோரிக்கையை பெற அவர்கள் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதாக உணர்கிறேன்.

அவர்கள் அரசியல் லாபங்களுக்காக எங்களையும் என் மகளையும் பயன்படுத்துகிறார்கள். நீதிக்கான இந்த போராட்டத்தில் இரு கட்சிகளுக்கிடையில் நான் சிக்கி இருப்பதாக உணர்கிறேன் என கூறினார்.

மேலும் செய்திகள்