திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் மூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்!

வீட்டில் இருந்து திருமண மண்டபத்திற்கு கல்யாண மாப்பிள்ளை 11 கிலோ மீட்டர் மூச்சுவாங்க ஓடி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2020-01-22 11:42 GMT
இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் நீரஜ் மால்வியா. இவருக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மணமகன் நீரஜ் மால்வியா  திடீரென்று தனது வீட்டில் இருந்து திருமண மண்டபத்திற்கு 11 கிலோமீட்டர் மூச்சு வாங்க ஓடியுள்ளார்.

அவருக்கு பின்னால், அவரைத் தொடர்ந்து நீரஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பின்னாடியே ஓடி வந்தனர்.  இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் நீரஜ் மால்வியா எதையோ அபகரித்துக்கொண்டு ஓடுகிறார் என நினைத்துள்ளனர்.  பின்னர் அவர் மண்டபத்திற்கு சென்று மணமகளை கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது, உடற்பயிற்சி பயிற்சியாளரான நீரஜ் மால்வியா,  விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜாக்கிங் செல்வது போல ஓடியுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து மணமகளின் அப்பா கூறுகையில், எனது மாப்பிள்ளையை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ளவே அவர் அவ்வாறு செய்தார் என புன்னகையுடன் கூறினார்.

மேலும் செய்திகள்