அரசுக்கு அறிவுரை கூறவும், எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு -முகமது ஆரிப் கான்

அரசுக்கு அறிவுரை கூறவும் எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு என்று கேரள கவர்னர் முகமது ஆரிப் கான் சட்டசபை உரையில் குறிப்பிட்டார்.

Update: 2020-01-29 06:00 GMT
திருவனந்தபுரம்,

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் முதலில்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும்  ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆனால் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில், கேரள சட்டப்பேரவை இன்று தொடங்கியது. அப்போது கவர்னரை  திரும்ப பெற வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. பேரவையில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்த எதிர்ப்பு தெரிவித்து எம்எம்ஏ-க்கள் தடுத்து நிறுத்தியதால், அவை  காவலர்கள் பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரை அழைத்து சென்றார். இருப்பினும் கடும் அமளிக்கு இடையே  கவர்னர் உரை நிகழ்த்தி வருகிறார்.

கவர்னர் ஆரிப் முகமது கான் சபையில் பேசும்போது கூறியதாவது:-

மரபுப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பார். அரசுக்கு அறிவுரை கூறவும் எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு. அதை மோதல் போக்காக யாரும் எடுத்துக் கொள்ள கூடாது. ஜனாதிபதிதான் என்னை நியமித்தார். என்னை திரும்ப பெறக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். அது சட்டப்படி செல்லுமா என்பதை அவர்கள்தான் முடிவு  செய்யவேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு என கூறினார்.

கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேட்டியில் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக கவர்னர் ஆரிப் முகமது கான் கேரள சட்டசபையை கேலி செய்கிறார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின்  கருவியாகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார் என கூறினார்.

மேலும் செய்திகள்