திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரால் ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஆசிரியை
சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரால் ரோட்டில் இழுத்து செல்லபட்டார்.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் ஃபத்தா நகர். இங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ். அவரது வீட்டு முன் அமைக்கப்படும் சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதற்காக அவர் நிலத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பஞ்சாயத்து சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்தபோது அதற்கு ஸ்மிரிகோனா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்கார் என்பவர் தலைமையிலான ஆண்கள் கும்பல் ஸ்மிருதிகோனா தாசை முழங்காலில் கயிறை கட்டி ரோட்டில் இழுத்து சென்றனர். அந்த கும்பலால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். அதை தடுக்க வந்த அவரது சகோதரி சோமா தாசை அந்த கும்பல் தரதரவென் இழுத்து சென்றது.
இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இது வரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.
தற்போது இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். இது குறித்து ஸ்மிருதிகோனா போலீசில் புகார் அளித்து உள்ளார்.