சீனாவில் இருந்து கேரளா வந்த வாலிபர் திருமணம் தள்ளிவைப்பு

சீனாவில் இருந்து கேரளா வந்த வாலிபரின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2020-02-05 21:04 GMT
திருச்சூர்,

கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் சீனாவில் உள்ள இவூ நகரில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். அவர், தனது திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வந்தார். இந்த தகவல் கடந்த 3-ந் தேதி தான் மாநில சுகாதாரத்துறைக்கு தெரியவந்தது. உடனே மருத்துவத்துறை அதிகாரிகள் அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்தனர்.

மேலும், 28 நாட்களுக்கு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்றும், வீட்டிலேயே தனி அறையில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இதனால் நேற்று முன்தினம் கதங்கோடு கிராம பஞ்சாயத்தில் அந்த இளைஞருக்கு நடக்க இருந்த திருமணம் அவருடைய குடும்பத்தினரால் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் அதில் மணமகனுக்கு பதிலாக அவருடைய தாயார் மணமகளுக்கு மாலை சூட்டினார்.

மேலும் செய்திகள்