நிதி நடவடிக்கை பணிக்குழு தீர்ப்புக்கு பிறகு ஹபீஸ் சயீத் விடுவிக்கப்படுவார்?

நிதி நடவடிக்கை பணிக்குழு தீர்ப்புக்கு பிறகு சர்வதேச சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக ஹபீஸ் சயீத் விடுவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2020-02-15 05:21 GMT
ஹபீஸ் சயீத் : File Photo
புதுடெல்லி

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு  நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.

கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி  ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்று பாகிஸ்தான்  கூறியது.  மேலும் அந்நாட்டிலே  ஹபீஸ் மீது வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த நிலையில்  தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட 2 வழக்குகளில்  லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் (ஏடிசி)  சயீதுக்கு தலா ஐந்தரையாண்டுகள் என  11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்)  கடைசி கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு  நிதியளிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாகிஸ்தான் சாம்பல்  பட்டியலில் நீடிக்கும் என்றும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்தே ஹபீஸ் சயீத்துக்கு  லாகூர் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.  நாளை நடைபெறும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) கூட்டத்தில் , பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படத் தவறியதற்காக பாகிஸ்தானை தடுப்புப்பட்டியலில் சேர்க்க வேண்டுமா என்று முடிவு  செய்யப்படும். 

பயங்கரவாதியும், ஜமா அத்-உத்-தாவா (ஜூடி) தலைவருமான ஹபீஸ் முகமது சயீத், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்)  தீர்ப்புக்கு  பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட  தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சட்டத்தில் உள்ள  ஓட்டைகள்  காரணமாக ஹபீஸ் சயீத் விடுவிக்கப்படுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் செய்தி நிறுவனமான டான்வெளியிட்டு உள்ள செய்தியில்  சயீத்தின் சட்ட ஆலோசகர்,  தனது கட்சிக்காரர் வரவிருக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழு  கூட்டத்திற்கு முன்னதாக"அழுத்தம்" காரணமாக தண்டிக்கப்பட்டுள்ளா என வாதிடுவார் என கூறி உள்ளது.

பாகிஸ்தானில், பயங்கரவாத குழுக்கள் தடைசெய்யப்படுகின்றன, அதே நேரத்தில் அவர்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் வழக்கமாக செயல்படுகிறார்கள்.

இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து தளவாடங்கள், பயிற்சி மற்றும் நிதிகளை வழங்குவதாகவும், அவற்றை அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் பலர் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனமூலம் தீவிரவாதிகள் வருவாயைப் ஈட்டுகிறார்கள்.

மேலும் செய்திகள்