"பசுமை பொருளாதாரத்தை" மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் -பிரதமர் மோடி
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
காந்திநகர்
வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ஐ.நா. மாநாடு, குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறுகிறது. இதில் காணொலிகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
நாட்டின் வனப்பரப்பு 21 .67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனங்களின் எண்ணிக்கை 745 ல் இருந்து 870 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இமய மலையின் உயரமான சிகரங்களில் வசிக்கும் பனிச் சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக சிறப்புத் திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில், 450 மெகாவாட் மறுசுழற்சி மின்உற்பத்தி செய்யப்பட்டு மின் வாகனங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், நீர்வள பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பசுமை பொருளாதாரத்தை வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும்.
பாரீஸ் உடனப்பாட்டின் அம்சங்களை அதிகம் அமல்படுத்தியுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முக்கிய கவனம் பெரும் உயிரின பாதுகாப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என கூறினார்.
இயற்கையுடன் நல்லிணிக்கமாக வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இந்த மாநாட்டின் சின்னமாக தென்னிந்தியாவின் கோலம் அமைந்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார்.