திருட வந்த இடத்தில் "இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்!

கேரளாவில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்ற திருடன் மனம் மாறி இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-20 10:02 GMT
திருவனந்தபுரம்,

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். அதிலும் போலீசாரிடம் சிக்கும் காமெடித் திருடர்களின் கதையைக் கேட்கும் விசாரணை அதிகாரிகள், வழக்குகளை மறந்து வாய்விட்டு சிரித்த சம்பவங்களும் உண்டு.

இந்தநிலையில், கேரள மாநிலம் திருவாங்குளம் பகுதியில் பல கடைகளில் திருடிய திருடன் ஒருவன் அங்குள்ள ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் திருட பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான். உள்ளே சென்றதும் அங்குள்ள புகைப்படங்களை வைத்து அது ராணுவ வீரரின் வீடு என தெரிந்து கொண்ட திருடன், அங்கு திருடாமல்  சுவரில்  எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

அந்த சுவரில் 'இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறி விட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளான்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள போலீசார் அந்த திருடனை பிடிக்க விசாரணையை மேற்கொண்டுள்ளனர். எனினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்