இரு நாடுகளும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம் - டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
இரு நாடுகளும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர்.
டிரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஐதராபாத் மாளிகையின் முன் உள்ள புல்வெளிகளில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
டிரம்ப் - மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பேச்சுவார்த்தை முடிந்ததும் பிரதமர் மோடியும்- டொனால்டு டிரம்பும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
பிரதமர் மோடியும் நானும் எங்கள் மக்களை தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளோம். தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து இருவரும் நீண்ட விவாதம் நடத்தினோம். இரு நாடுகளும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் "விரிவான வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் கவனம் இருந்தது.
எங்கள் வருகையின் போது, பாதுகாப்பான 5 ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கின் முக்கியத்துவம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் சுதந்திரம், முன்னேற்றம், செழிப்புக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தோம்.
எங்கள் அணிகள் ஒரு விரிவான வர்த்தக உடன்படிக்கைக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன, மேலும் இரு நாடுகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையை எட்ட முடியும் என்று நான் நம்புகிறேன். நான் பதவியேற்றதிலிருந்து, இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி கிட்டத்தட்ட 60 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் உயர்தர அமெரிக்க ஆற்றலின் ஏற்றுமதி 500 சதவீதம் அதிகரித்துள்ளது என கூறினார்.