டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்

டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-02-26 04:36 GMT
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகின்றன. டெல்லியில்  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.  

மூன்று தினங்களாக நடந்த இந்த மோதலால், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வன்முறையில் இதுவரை 18-பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லி வன்முறையை கண்டித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட மாணவர்கள் முயன்றனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். அதிகாலை 3.30 மணிக்கு இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.

போலீசார் தடியடி நடத்தியதாக போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜேசிசி( Jamia Co-ordination Committee ) மாணவ அமைப்பு தெரிவித்தது. மேலும், கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்