2ஜி விவகாரம்; விவாதம் நடத்த தயாரா? மக்களவையில் மத்திய மந்திரி ஆவேசம்
2ஜி விவகாரம் பற்றி மக்களவையில் தி.மு.க. மற்றும் ஆளுங்கட்சிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் ஆ. ராசா எழுந்து பேசினார். அவர், 2ஜி அலைக்கற்றையில் சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என குற்றம்சாட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு சலுகை அளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், தொலைத்தொடர்பு துறை நிலைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் நேரத்தில், வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினார்.
தொடர்ந்து அவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பது குறித்து, அவையில் ஒருநாள் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டார். அதற்கு அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 2ஜி விவகாரம் பற்றி நடைபெற்ற காரசார விவாதத்தால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.