மத்தியபிரதேச சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய பிரதேச சட்ட சபையில் இன்று மாலை 5.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

Update: 2020-03-20 03:19 GMT
புதுடெல்லி, 

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த இரு நாட்களாக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். அவர்கள் கூறியதாவது:-

ஒத்திவைக்கப்பட்ட மத்தியபிரதேச சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூட்ட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே ஒரே சபை நடவடிக்கையாக இருக்க வேண்டும். கையை உயரத்தூக்கி தங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்குள் முடிவடைய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்