கைகழுவும் திரவம், சுவாச கருவிகள் ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி

கைகழுவும் திரவம், சுவாச கருவிகள் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2020-03-24 20:13 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில் சானிடைசர் என்று அழைக்கப்படுகிற ஆல்கஹால் கலந்த திரவத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அடிக்கடி கை கழுவ ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சானிடைசர் பற்றாக்குறை ஏற்பட்டு விடாமல் தடுக்கிற வகையில், அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உயிர்காக்கும் சுவாச கருவிகள் தேவை நிறைய உள்ளதால், அனைத்து விதமான சுவாச கருவிகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்