புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுமுறை; முதல் அமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

Update: 2020-03-25 11:58 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதுச்சேரியில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது.

புதுச்சேரியில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிதி மற்றும் கருவூலகம், பொது சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, சிறைத்துறை, மின் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி 21 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

விடுமுறை அளிக்கப்பட்ட துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பால், மருந்து மற்றும் மருத்துவ  உபகரணங்கள், உணவு பொருட்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், காய்கறிகள் மற்றும் சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் வர்த்தகம் தடைபடாது என்றும் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்