கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம்: முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது
திருவனந்தபுரம்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. கேரளாவில் மதுபானம் கிடைக்காத விரக்தியில், 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், கேரளாவில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் கலால் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். திடீரென மது நிறுத்தப்பட்டதால், சமூக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஆன்லைன் மூலமாக மதுவிற்பனையை தொடரவும் அரசு பரிசீலித்து வருவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.