மே 31ந்தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு ஒத்தி வைப்பு

மே 31ந்தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-05-04 08:29 GMT
புதுடெல்லி,

நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு (பிரிலிமினரி), மே மாதம் 30-ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தயாராகி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.  பின்னர் இந்த ஊரடங்கு அடுத்த இரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடப்பது பற்றி, தேர்வுக்கு தயாரானவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.  இந்நிலையில், இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தேர்வு நடைபெறுவது பற்றி மே 20ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்