மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய ‘பாஸ்’ தேவை இல்லை: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய ‘பாஸ்’ தேவை இல்லை என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-05-11 15:13 GMT
ஜெய்ப்பூர், 

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மே 17ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. 

ராஜஸ்தானில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 108 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,898 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய ‘பாஸ்’ தேவை இல்லை என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும், ஊரடங்கு தளர்த்தப்படும் நேரமான காலை 7.00 முதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு பகுதிகளில் இந்த விலக்கு கிடைக்காது என்றும், மாநிலத்திற்கு உள்ளே நுழையவும், வெளியேறவும் பாஸ் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் மற்ற மாநிலங்களிலிருந்து ராஜஸ்தானுக்கு வருபவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் சிறிய வாகனங்களில் பயணம் செய்வோருக்கு பாஸ் வழங்கும் அதிகாரம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர். தாசில்தார், போக்குவரத்து அதிகாரி, காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்