துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு

துணை ராணுவத்தினருக்கான கேண்டீன்களில் இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Update: 2020-05-13 09:48 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்றைய தினம் ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தார். அப்போது,  தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் கூறியிருந்தார். 

இந்தந் இலையில், துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், அனைத்து மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF) கேன்டீன்களிலும் உள்நாட்டு  தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யப்படும் என உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 இந்த நடவடிக்கையானது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய ஆயுதப் படையை சேர்ந்த சுமார் 10 லட்சம் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 50 லட்சம் உறுப்பினர்கள் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துவார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்