70 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய விருப்பம்: ஆய்வில் தகவல்

70 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2020-05-23 19:02 GMT
புதுடெல்லி,

கொரோனாவால் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு ஐடி நிறுவனங்கள் அனுமதித்துள்ள நிலையில் பேஸ்புக், கூகுளின் அல்பபெட், டுவிட்டர்  நிறுவனங்கள் இந்த வருடம் இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன. பேஸ்புக் ஊழியர்கள் 5 வருடங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில், வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக, 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

'நைட் பிராங்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில்,

சமூக இடைவெளியை பராமரிக்கவும், வணிகத்தை தொடர்ந்து நடத்தவும், இந்த திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாக கூறியுள்ளது.

'நைட் பிராங்', பலதரப்பட்ட, 230 நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஆய்வை நடத்தியது. அதில் வீட்டிலிருந்தே பணிகளை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், அதனால் உற்பத்தி திறன் எதுவும் பாதிக்கப்படவில்லை என, பெரும்பாலான நிறுவனங்கள் கூறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொலைவிலிருந்து செயல்படும்போது, ஊழியர்கள், குடும்பத்துடனான இணைப்பு, கவனச்சிதறல் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு, 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து பணியாற்றுவர் என ஆய்வில் கலந்துகொண்டோரில் 50 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், 7 சதவீதத்தினர் மட்டும், அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்றுவர் என தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக 28 சதவீதத்தினரும்; முன்னர் இருந்த அளவிலேயே இருந்ததாக 35 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 26 சதவீதத்தினர் உற்பத்தி திறன் குறைந்துவிட்டதாகவும்; 11 சதவீதத்தினர் கணித்து சொல்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்