சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?

சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Update: 2020-05-30 05:30 GMT
புதுடெல்லி

அடுத்த 5-வது கட்ட ஊரடங்கு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த முடிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்

தொடர்ந்து அமித்ஷா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மாநில முதல்-மந்திரிகள் தெரிவித்த கருத்துகளை அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.

எனவே நாட்டில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா பரவல் அதிகமாக உள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் என்றும், மற்ற பகுதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில்  70 சதவீதம் 13 நகரங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை இந்த நகரங்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்கள் மும்பை, புதுடெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா / ஹவுரா, இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் (ராஜஸ்தான்), சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் (தமிழ்நாடு) ஆகியவை ஆகும்.

அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா நகராட்சி ஆணையர்கள் மற்றும் 13 மோசமான கொரோனா பாதிப்பு நகரங்களின் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்