உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் சீன மொபைல் ‘ஆப்’களை பயன்படுத்த தடை

லடாக் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர் களை கொன்ற சீனாவுக்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2020-06-20 20:33 GMT
லக்னோ,

லடாக் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர் களை கொன்ற சீனாவுக்கு நாடு முழுவதும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீன தயாரிப்புகளை வாங்காதீர்கள், பயன்படுத்தாதீர்கள் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் சீன மொபைல் ‘ஆப்’களை தங்களது செல்போன்களில் இருந்து நீக்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறப்பு அதிரடி படையினர் ‘டிக்-டாக், யுசி பிரவுசர்’ உள்ளிட்ட 52 சீன மொபைல் ‘ஆப்’களை தங்ககளது செல்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறப்பு படைப்பிரிவில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதுகுறித்து உயர் அதிகாரி கூறுகையில், ’சீன மொபைல் ஆப்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பது துறை சார்ந்த விவகாரம். இந்த உத்தரவு இந்த துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே இதுசம்பந்தமாக ஊடகங்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்க இயலாது’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்