மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை; அதிர்ச்சி தகவல்
மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 61 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர். மராட்டியத்தில் 6 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
மராட்டியத்தின் மும்பை மாநகரில் மலாட் பகுதியில் வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த 70 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், அவர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி மும்பை மாநகராட்சி நிர்வாகம் மும்பை போலீசின் உதவியை கோரியுள்ளது. கடந்த 3 மாதங்களாக காணாமல் போன அவர்களை மொபைல் போன் இருப்பிடம் மற்றும் சி.டி.ஆர். ஆகியவற்றின் வழியே கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியான பின் சிகிச்சை பெறுவதற்கு பதிலாக, திடீரென 70 நோயாளிகள் காணாமல் போயுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.