டெல்லி சுகாதார மந்திரி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார்
டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு
நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்தது. இதனையடுத்து, அவருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டது.
அதன் பாதிப்பு நீடித்த நிலையில், அவர் சாகேத் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பது என கடந்த 19ந்தேதி முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னேற்றம் காணப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து அவர் முழுவதும் விடுபட்டு உள்ளார். குணமடைந்த அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.