கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவரும் தாராவி
தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.
நேற்று 11 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தாராவியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 210 ஆக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 218 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 81 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததால் அங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்தும் படிப்படியாக மீண்டுவருகிறது.