டெல்லியில் கொரோனா பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் முதல் இடத்தில் மராட்டியமும், அதற்கு அடுத்த இடத்தில் டெல்லியும் உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று பலி எண்ணிக்கையும் டெல்லியில் உயர்ந்து உள்ளது.
டெல்லியில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பாதிப்பினை குறைக்க, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 30ந்தேதி வரை பரிசோதனை செய்யப்படுகிறது. வருகிற ஜூலை 6ந்தேதி வரை டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளிலும் பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, டெல்லி முழுவதும் 2.45 லட்சம் பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் 45 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடந்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக இன்று உயர்ந்துள்ளது. இது, மறுமதிப்பீடு செய்வதற்கு முன் 280 ஆக இருந்தது. மத்திய அரசு உத்தரவின்படி மேற்கொள்ளப்படும் மறுமதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்று கூறியுள்ளார்.